"ங்கொய்யால நான் லஞ்சம் கொடுத்தா உனக்கெங்கேய்யா எரியுது ?" - கடுப்புடன் Wal-mart !!
Wal-mart என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்: கேள்விப்படாவிட்டாலும் பிரச்சினையில்லை. இதோ தெரிந்துகொள்ளுங்கள். wal-mart உலகின் மிகப்பெரிய, மெகா சூப்பர் மார்க்கெட் செயினைக் கொண்டிருக்கும் அமெரிக்க நிறுவனம். சமீபத்தில் தான் இந்தியாவில்; இந்த நிறுவனத்தை இந்தியாவிற்குள் கொண்டுவர வேண்டும் என்று மன்மோகன் சிங் ஒற்றைக்காலில் நின்று தடுக்கி விழுந்து மூக்குடைபட்டார். இந்த நிறுவனம் 15 நாடுகளில் 8500 கடைகளைக் கொண்டிருக்கிறது. கடைகள் என்றால் நாயரின் ரீ கடைகளைப் போல் அல்ல. அனைத்தும் சூப்பர் மார்க்கெட்கள்! உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். இந்த நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் சிம்பிளானது. மற்றவர்களை விட குறைந்த விலையில் பொருட்களை வழங்குவது !
இதன் இத்தகைய நடவடிக்கையால் சிறு வணிகர்கள் தான் பெரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள். மேலும், தொழிலாளர்களை அடிமைகளைப் போல் நடத்துவது, தினமும் 18 மணி நேரம் வேலை வாங்குவது, குறைந்த சம்பளம் வழங்குவது என்று இந்த நிறுவனத்தின் மீதான புகார்களும் அதிகம். அமெரிக்காவில் இவர்களின் இந்தப் பருப்பெல்லாம் வேகாது. அங்கு கடுமையான தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளன. தென் அமெரிக்க நாடுகள் , மெக்ஸிகோ, சீனா போன்ற நாடுகளிலேயே இவர்களின் தொழிலாளர் நல உரிமை மீறல்கள் அரங்கேறும். இந்த நாடுகளில் தான் இவர்களுக்கு வருமானமும் அதிகம். இவர்களின் அராயக போக்கினால் மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பும் அதிகம்.
இந்த நிலையில் தான் லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறது wal-mart. இது ஒரு பழைய விவகாரம். இவர்கள் மெக்ஸிகோவில் 1991 இல் Walmart de Mexico ஐத் திறப்பதற்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் இது. தற்போது The Newyork Times பத்திரிக்கை கடந்த 21 ம் திகதி இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து ஊதிப் பெரிதாக்கி விட்டிருக்கின்றது. இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் இருக்கின்றது wal-mart.
இந்த விவகாரம் வெளியானதன் காரணமாக wal-mart இன் விற்பனை மற்றும் பங்குகளின் பெறுமதி குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த விவகாரம் wal-mart நிர்வாகிகளுக்கும் தலையிடியாக மாறியிருக்கின்றது. ஏனெனில் அமெரிக்க சட்டப்படி லஞ்சம் கொடுப்பதென்பது கடுமையான குற்றம்.( நம் நாட்டிலும் தான் குற்றம். பிளீஸ் நம்புங்களேன்....) அமெரிக்க சட்டப்படி தண்டம், சிறைத் தண்டனை மட்டுமல்லாது மெக்ஸிகோவில் நடைபெறும் முழு வியாபாரத்தையுமே இழுத்துமூட வேண்டிவரலாம். wal-mart இன் 5 இல் ஒரு பங்கு கடைகள் மெக்ஸிகோவில் தான் இயங்குகின்றன. அங்கு 209,000 பேர் பணிபுரிகிறார்கள். இக் கடைகள் மூலம் அந் நிறுவனம் பெரும் லாபம் சம்பாதித்து வருகின்றது. இப்படியான பெரிய சந்தையை wal-mart ஆல் விட்டுவிடவும் முடியாது.
அமெரிக்க நீதித் துறையில் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு புகாரும் பதிவாகவில்லை. ஆனால் இப்போது விவகாரம் வெளியே தெரிந்துவிட்டதால் புகார் கொடுக்க wal-mart இற்கு எதிரான அமைப்புகள் பல தயாராகியிருக்கும் என ஊகிக்கலாம். தற்போது wal-mart இந்த விவகாரம் பற்றி தனது உள்ளக விசாரணையைத் தொடங்கியிருப்பதாக அறிவித்திருக்கின்றது. ஆனால் இதே விடயம் தொடர்பாக 2005 இலும் ஒரு உள்ளக விசாரணை நடத்தப்பட்டு அந்த அறிக்கை மூடி மறைக்கப்பட்டதாக Newyork Times குற்றஞ்சாட்டியிருக்கின்றது. அப்போது அது யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது அமெரிக்க நீதித்துறையும் பத்திரிக்கைகளும் கண்காணித்தபடி இருக்கும் என்பதால் மூடிமறைக்க முடியாது. அதுசரி, மெக்ஸிகோவிலும் நீதித்துறை ஒன்று உள்ளது தானே அவர்கள் ஒரு நடவடிக்கையுமே எடுக்கமாட்டார்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சும்மா விளையாடாம போங்க சார். இவர்கள் லஞ்சம் கொடுப்பதற்கு இடைத்தரகராகச் செயற்பட்டதே அந்த நீதித்(?)துறை தான் !
[ மெக்ஸிகோ பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன விஷயம். இன்று அதிகம் பேசப்படும் மாயன் இனத்தவர் கட்டிய பிரமிட்டுகள் இங்கு தான் உள்ளன. மேலும்; தற்காலத்தில் உலகுக்குத் தேவையான போதைப் பொருள் ஏற்றுமதி செய்யப்படுவதே மெக்ஸிகோவிலிருந்து தான். அந்தளவுக்கு அங்கே சட்டம், ஒழுங்கு பிரமாதம். இன்னொரு சின்ன விஷயம்; விவாகரத்து வழக்குகள் அதிகமாக வருகின்றன என்று; இரண்டு வருடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இணைந்து வாழுங்கள் என்றும் தொடர்ந்து வாழ விரும்பினால் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளலாம், அல்லாவிடில் இரண்டு வருட முடிவில் "உன்னை யாரென்றே எனக்குத் தெரியாது" என்று டயலாக் எல்லாம் பேசிக் கொண்டிருக்காமல் பிரிந்து விடலாம் என்னும் அற்புத சட்டத்தை உலகில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய நாடு நம்ம மெக்ஸிகோ தான். இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடனேயே நீங்கள் மெக்ஸிகோ visa எடுக்க ஓடுவீர்கள் என்று தெரியும். நானும் ஓடினேன். but பாஸ்போர்ட்டே தரமாட்டோம் என்று கூறிவிட்டார்கள். இதே வெங்காயத்தில் இன்னொரு வெங்காயம் எழுதிய இவ்வார ராசி பலனில் எனது ராசிக்கு பாஸ்போர்ட் இல்லாமலேயே வெளிநாடு செல்லும் யோகம் இருப்பதாக போட்டிருக்கிறார். so, நானும் ட்ரை பண்ணுகிறேன். நீங்களும் (இங்கே கிளிக் செய்து) உங்கள் ராசி பலனைப் படித்த பின்பு ட்ரை பண்ணுங்கள். முடிந்தால் மெக்ஸிகோவில் சந்திப்போம். ]
சரி; அதெல்லாம் இருக்கட்டும், இந்த லஞ்சம் கொடுத்த விவகாரம் எப்படி வெளியே தெரியவந்தது என்று பார்ப்போமா......
{அதை இரண்டு நாட்களின் பின்பு மெக்ஸிகோவிலிருந்து எழுதுகிறேனே....}
{ஏதாவது தவறிருந்தால், மெக்ஸிகோவின் விழுதுகள் ஏதாவது தெரிவிக்க விரும்பினால் தெரிவிக்கலாம்}
0 comments:
Post a Comment